Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: ரேஷன் பொருட்களை முறையாக வினியோகிக்க குடும்ப அட்டைதாரர்களை வாட்ஸ்-அப் குரூப்பில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினமும் வேலைக்கு சென்று ஊதியம் பெறுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது நிலையை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அரிசி பருப்பு போன்றவை வினியோகம் செய்யப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த நிலையில் ரேஷன் பொருட்கள் மக்களை முறையாக சென்று சேர எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அவர்களுக்கு வீடுதோறும் எப்படி வினியோகம் செய்வது என்பது குறித்தும் தஞ்சை மாநகரில் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சை பள்ளியக்கிரஹாரத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் உதவி பொறியாளர் மகேந்திரன் துப்புரவு ஆய்வாளர் எபின் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் ரேஷன் கடைகளில் எவ்வளவு குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர் எனவும் அவர்களது செல்போன் நம்பர் இருக்கிறதா எனவும் கேட்டறிந்தனர். மேலும் கடை ஊழியர்களிடம் நீங்கள் ஒரு வாட்ஸ்-அப் குரூப் உருவாக்கி அதில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரையும் சேர்க்க வேண்டும். அந்த குரூப்பை உதவி பொறியாளர் உருவாக்கியுள்ள அதிகாரிகளின் குரூப்புடன் சேர்க்க வேண்டும்.
வரும் நாட்களில் ஒருவரையொருவர் நேரில் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டால் வாட்ஸ்-அப் மூலம் தான் தகவல் பரிமாற முடியும். ரேஷன் பொருட்கள் முறையாக சென்று சேர்ந்து இருக்கிறதா அதில் குறை ஏதேனும் உள்ளதாட என்பதையும் அறிந்து கொள்ள முடியும் என்றனர்.
ஒவ்வொரு கடையிலும் பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களை வாட்ஸ்-அப் குரூப்பில் இணைக்க முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.